'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் - அமீர்கான் புகழாரம்


மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் - அமீர்கான் புகழாரம்
x

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்று இந்தி நடிகர் அமீர்கான் கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சி, வருகிற 30-ந் தேதி ஒலிபரப்பாகிறது.

இதையொட்டி, 'மன் கி பாத்-100' என்ற ஒருநாள் தேசிய மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி அனுராக் தாக்குர், இந்தி நடிகர் அமீர்கான், நடிகை ரவீணா டாண்டன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 100 பிரபலங்கள் கலந்து கொண்டனர். 'மன் கி பாத்' நிகழ்ச்சிகளில் பிரதமர் குறிப்பிட்டு பேசிய சாதனையாளர்களும் பங்கேற்றனர்.

கருத்து சுதந்திரம்

மாநாட்டை தொடங்கி வைத்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

நாட்டில் 'கட்டாய அமைதி' அமல்படுத்தப்படுவதாக சிலர் (சோனியாகாந்தி) கட்டுரை எழுதுவது வேதனை அளிக்கிறது. இந்த நாட்டில் உள்ள கருத்து சுதந்திரம், உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

அதுபோல், சிலர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். நெருப்புக்கோழி போல் நடந்து கொள்கிறார்கள் என்று அவர் பேசினார்.

அமித்ஷா

அமித்ஷா பேசியதாவது:-

'மன் கி பாத்' நிகழ்ச்சி, கோடிக்கணக்கான இளைஞர்களை கவர்ந்துள்ளது. ஆகாஷ்வானிக்கு புத்துயிர் அளித்துள்ளது. அரசியல்வாதியான நரேந்திர மோடி, ஒரு அரசியல் பிரச்சினையை கூட பேசாமல் 99 பகுதிகள் நடத்தியதுதான், இந்த நிகழ்ச்சியின் அழகு என்று அவர் பேசினார்.

அமீர்கான்

நடிகர் அமீர்கான் பேசியதாவது:-

'மன் கி பாத்' நிகழ்ச்சி, ஒரு தலைவர், பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனம். மக்கள் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துகிறார்.

ஒரு தலைவர், தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியம். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை. இந்நிகழ்ச்சி, மக்கள் இயக்கமாக நடக்கிறது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் பேசினார்.

ரவீணா டாண்டன்

நடிகை ரவீணா டாண்டன் பேசியதாவது:-

'மன் கி பாத்' மூலம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் பிரதமர் தொட்டு வருகிறார். கண்டுகொள்ளப்படாத நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இந்தி திரையுலகில் கட்டுப்பாடுகளை உடைத்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள். சின்னத்திரையிலும், ஓ.டி.டி.யிலும் பெண்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது என்று அவர் பேசினார்.


Next Story