மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்


மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
x

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷில் குமார் குப்தா, சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோரின் பதவிக் காலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

சுஷில் குமார் குப்தா அரியானா மாநில தேர்தலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதால், அவருக்கு பதிலாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலை மற்றொரு வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்தது. இதையடுத்து அவர், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களான ஸ்வாதி மாலிவால், என்.டி குப்தா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவில் லைன்சில் உள்ள டெல்லி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அவர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வருகிற 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 ஆகும்.


Next Story