ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு..!!


ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு..!!
x

Image Courtacy: ISROTwitter

தினத்தந்தி 9 Sep 2023 10:56 PM GMT (Updated: 9 Sep 2023 10:58 PM GMT)

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கடந்த 2-ம் தேதி 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் தொடர்ந்து வருகிறது.

பின்னர் கடந்த 5-ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டது. 282 கி.மீ x 40,225 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் ஆதித்யா விண்கலம் சுற்றி வந்தது. தொடர்ந்து விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதளத்தில், "ஆதித்யா-எல்1 மிஷன்: புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக (EBN#3) பெங்களூரு ISTRAC இலிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. மொரீஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இந்த செயல்பாட்டின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன. புதிய சுற்றுப்பாதையை அடைந்தது. 296 கிமீ x 71767 கிமீ ஆகும். அடுத்த அதிகரிப்பு (EBN#4) செப்டம்பர் 15-ஆம் தேதியன்று மதியம் 02:00 மணி IST இல் திட்டமிடப்பட்டுள்ளது" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.




Next Story