பொதுச்செயலாளர் விவகாரம்: சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு


பொதுச்செயலாளர் விவகாரம்: சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக சசிகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

செம்மலை மனு தள்ளுபடி

இந்த வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகுதான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜனவரி 23-ந்தேதி உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இந்த உத்தரவுக்கு எதிராக செம்மலை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

சசிகலா கேவியட் மனு

இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து சசிகலா சார்பில் வக்கீல் ஆதித்ய ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி 31-ந்தேதி கேவியட் மனு செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு காலாவதியாகி விடும் என கருதி ஏப்ரல் 24-ந்தேதி மீண்டும் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது

மேலும், கேவியட் மனுவில் வி.கே.சசிகலா தன்னை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story