அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் டுவிட்


அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்:  ஓ.பன்னீர் செல்வம் டுவிட்
x
தினத்தந்தி 15 Jun 2022 2:54 PM GMT (Updated: 15 Jun 2022 2:54 PM GMT)

அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றைத்தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டரில், அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேஎண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Next Story