காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு வருகிற 10-ம் தேதி வரை விடுமுறை


காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு வருகிற 10-ம் தேதி வரை விடுமுறை
x
தினத்தந்தி 5 Nov 2023 5:13 AM GMT (Updated: 5 Nov 2023 5:23 AM GMT)

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது.

காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டு மொத்த தரக் குறியீடு (AQI) 346 ஆக உள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (மூன்றாவது முனையம்) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் முறையே 438, 491, 486, 473 என்ற அளவில் உள்ளது.

காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகிறார்கள். இதன் மூலம் காற்று மாசு சற்று குறையும் என கருதப்படுகிறது. தேவையற்ற கட்டிட வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பலர் மூச்சுத் திணறல், சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில், டெல்லியில் அதிகரித்துவரும் தொடர் காற்று மாசு காரணமாக அங்கு தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 10ம் தேதி வரை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் வழியாக நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story