முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை; 'தாக்குதல் நடத்துவோம்' இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்


முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்துவோம் இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்
x

இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.

டெல்லி,

உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது. ரவுடியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். இவர் 2004 முதல் 2009 வரை எம்.பி.யாக இருந்த நிலையில் இவர் மீது பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகள் இருந்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, குற்றவழக்கில் சிறையில் இருந்த ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமது ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் சனிக்கிழமை பிரயாங்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது, குற்றவாளிகள் ஆதிக் அமகது, அர்ஷப் அகமது ஆகியோரை 3 பேர் சுட்டுக்கொன்றனர். பத்திரிக்கையாளர்கள் வேடத்தில் வந்த 3 பேர் தாக்கல் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஆதிக் அகமது, அர்ஷப் அகமதுவை சுட்டுக்கொன்றனர். போலீசார் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பானது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய சன்னி சிங், லவ்லெஷ் திவாரி, அருண் மவுரியா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் எம்.பி. ஆதிக் முகமது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பதிலடியாக இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இந்திய துணைகண்டத்தில் செயல்பட்டு வரும் அல்கொய்தா அமைப்பு இஸ்லாமிய மதப்பண்டிகையான ரம்ஜான் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் ஆதிக் முகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் முகமதுவை தியாகிகள் என குறிப்பிட்ட அல்கொய்தா இதற்கு பழி தீர்ப்போம் என மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், இஸ்லாமிய மதத்தினரை விடுதலை செய்வோம் என்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story