ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றமா? சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் பவன் கல்யாண் சந்திப்பு


ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றமா? சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் பவன் கல்யாண் சந்திப்பு
x

சந்திரபாபு நாயுடுவை நடிகர் பவன் கல்யாண் சந்தித்துப் பேசினார். ஜனநாயகத்தைக் காக்க அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்படப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். இது அங்கு கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர அரசியல் களம்

ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அங்கு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன்கல்யாண், "எதிர்க்கட்சிகள் ஓட்டு 2024 தேர்தலில் பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்வேன்" என்று ஏற்கனவே சூளுரைத்திருக்கிறபோது, இந்தக் கேள்வி வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ஜனசேனா கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். முன்பு தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா ஆகிய முக்கட்சிகளின் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சிதான் தலைமை வகித்தது என்பது நினைவுகூரத்க்கது.

2018-ம் ஆண்டு முதல் இரு கட்சிகளுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தெலுங்கு தேசம் கட்சி தனித்திருக்கிறது. ஜனசேனா இந்தக் கட்சியுடன் நெருங்கி வந்தாலும், பா.ஜ.க., தெலுங்குதேசத்துடன் கரம் கோர்ப்பதில் விருப்பம் காட்டவில்லை.

சந்திரபாபு நாயுடுவுடன் பவன்கல்யாண் சந்திப்பு

இந்த நிலையில் ஐதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு பவன் கல்யாண் வந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு தலைவர்களும் முறைப்படி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

ஜனநாயகம் காக்க....

சந்திப்பைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இருவரும் கூறியதாவது:-

ஆந்திராவில் தற்போதைய சூழ்நிலை நெருக்கடி நிலையை விட மோசமானதாக உள்ளது. இங்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு எல்லா எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்த விவகாரத்தை நாங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம். அத்தகைய சூழ்நிலையில் தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு எல்லா உரிமையும் உள்ளது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய பயனாளிகளை குறைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய அரசாணை, நெல் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தராதது, எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கூட்டணி சாத்தியமா?

தெலுங்குதேசம் கட்சியும், ஜனசேனா கட்சியும் கூட்டணி சேருவதற்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு பதில் அளிக்கையில், "முன்பு பல கட்சிகளின் சேர்க்கை இருந்துள்ளது. கடந்த காலத்தில் நாங்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி வைத்திருந்தோம். பின்னர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஜனநாயகமும், அரசியல் கட்சிகளும் இயல்பாக செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறபோது, கூட்டணி பற்றி விவாதிக்கப்படும்" என பதில் அளித்தார்.

பவன் கல்யாண் கூறும்போது, "மாநிலத்தின் எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக விவாதித்தோம். மாநிலத்தில் பொறுப்புணர்வோடு பொறுப்பான நிர்வாகத்தை கொண்டு வருவது எங்கள் முதன்மையான பணி ஆகும். இந்தப் பிரச்சினை குறித்து நான் எங்கள் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடனும் எடுத்துச் செல்வேன்" என குறிப்பிட்டார்.


Next Story