மணிப்பூரின் இம்பாலில் நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார் அமித்ஷா


மணிப்பூரின் இம்பாலில் நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார் அமித்ஷா
x

கோப்புப்படம்

மணிப்பூரின் இம்பாலில் நாளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது. இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.

இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. கடந்த ஞாயிறன்று, ஒரு காவல் உயரதிகாரி உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரின் வீடு சூறையாடப்பட்டது. ரைபிள் படை பிரிவின் ஆயுத கிடங்கில் இருந்து ஆயிரம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டும் இருந்தன.

இந்த நிலையில், வன்முறை பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்கிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மணிப்பூருக்கு நேரில் சென்ற மந்திரி அமித்ஷா, தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனான சந்திப்பை இன்று நடத்தினார்.

இதில், மணிப்பூரின் அமைதி மற்றும் வளம் நம்முடைய முக்கிய முன்னுரிமையான விஷயம் என அவர் கூறினார். மாநில அமைதியை குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மணிப்பூரின் இம்பாலில் நாளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story