பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது


பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது
x

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கணக்கெடுப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் என்று ஆந்திர மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மந்திரி கூறினார்.

அமராவதி,

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் இல்லை என்று மத்திய அரசு மறுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பீகாரில் அம்மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவுகளை வெளியிட்டது. அதில், இதர பிற்படுத்தப்பட்டோர் 63 சதவீதம்பேர் இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. இதுகுறித்து ஆந்திர மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மந்திரி சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சுதந்திரம் பெற்ற பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே நடத்தப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறாத சாதிகளுக்கும் உதவ முடியும். இது, அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும்.

முதலில், 139 பிற்படுத்தப்பட்ட சாதிகளை மட்டும் கணக்கெடுக்க திட்டமிட்டு இருந்தோம். இப்போது எல்லா சாதிகளையும் கணக்கெடுக்க உள்ளோம். கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு தன்னார்வலருக்கும் 50 வீடுகள் ஒதுக்கப்படும். அவர்கள் வீடு, வீடாக சென்று, சாதி விவரங்களை சேகரிப்பார்கள். அந்த தகவல்களை மாநிலம் முழுவதும் உள்ள கிராம செயலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அங்குள்ள அதிகாரிகள் அதை சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தம் செய்வார்கள். அதன் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

19-ந் தேதி (நேற்று) முதல் 10 நாட்களில் ஒரே கட்டமாக இப்பணி முடிக்கப்படும். தேவைப்பட்டால், 4 அல்லது 5 நாட்கள் நீட்டிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, பிப்ரவரி 15-ந் தேதியோ அல்லது அதை ஒட்டியோ கணக்கெடுப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும். இந்த கணக்கெடுப்பு நியாயமானதாக, விரிவானதாக இருக்கும். நாடு முழுவதற்கும் முன்னுதாரணமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story