அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி


அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி
x
தினத்தந்தி 5 Aug 2023 8:14 AM GMT (Updated: 5 Aug 2023 9:43 AM GMT)

அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஓர் ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி இருந்தாலும், அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன.

சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்களுக்கு பா.ஜனதா என்றால் மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜி மட்டும் தான். அண்ணாமலை என்பவர் தமிழக பா.ஜனதாவின் தலைவர் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை தன்னை அரசியல் விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டு பேசுகின்ற நபர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு மீண்டும் செல்லூர் ராஜூ பதிலடி கொடுக்கும் வகையில் கூறியதாவது:-

பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன்.

நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார்.

அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஓர் ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன்.

அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.

என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துகளை நான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. தான். அதே போல் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எனவே அ.தி.மு.க.வை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை குறித்த செல்லூர் ராஜூவின் பதில் அறிக்கைக்கு பா.ஜனதா மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் பதிலளித்து பேசும்போது, செல்லூர் ராஜூ இவ்வளவு நாட்கள் எப்படி அமைச்சராக இருந்தார் என்பது விநோதமாக உள்ளது. செல்லூர் ராஜூ இதுபோன்ற பேச்சுகளை இனிமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்; அண்ணாமலை கத்துக்குட்டியா?, செல்லூர் ராஜூ கத்துக்குட்டியா என்பது மக்களுக்கு தெரியும் என கூறி உள்ளார்.


Next Story