சமூகத்தில் இன்னும் 25 சதவீதம் பேருக்கு கல்வி கிடைக்கவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு


சமூகத்தில் இன்னும் 25 சதவீதம் பேருக்கு கல்வி கிடைக்கவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:45 PM GMT)

சமூகத்தில் இன்னும் 25 சதவீதம் பேருக்கு கல்வி கிடைக்கவில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு 'பிரஸ் கிளப்'பில் நடந்த விழாவை முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசியதாவது:-

சமூகத்தில் இன்னும் 25 சதவீதம் பேருக்கு கல்வி கிடைக்கவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தில் அனைவருக்கும் நீதியை பெற்றுத்தர நான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். சமூக ஏற்றத்தாழ்வு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது.

இதனால் சமூகத்தில் பெரும் பகுதியினர் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் வர்க்கத்தினர் பசியுடன் தூங்கினாலும் பரவாயில்லை, ஆனால் அன்ன பாக்ய திட்டத்தை மட்டும் அமல்படுத்தக்கூடாது என்று நிறைந்தவர்கள் நினைப்பது சமூக விரோதமானது. மக்களின் பாக்கெட்டில் பணம் இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

அதனால் தான் நாங்கள் மக்களின் பாக்கெட்டில் பணம் போடும் திட்டங்களை அமல்படுத்துகிறோம். இதை எதிர்க்கும் பா.ஜனதாவினரின் மனநிலை சமூக விரோதமானது. அதனால் பத்திரிகையாளர்கள் அரசின் நல்ல திட்டங்களை மக்களை அடையும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னை பற்றி பத்திரிகைகளில் பொய் செய்திகளை வெளியிட்டாலும், அதுபற்றி நான் கேள்வி கேட்பது இல்லை. சாமானிய மக்கள் பிற வழிகளில் இருந்து உண்மைகளை அறிந்து கொள்ளும் அளவுக்கு விழிப்புடன் உள்ளனர்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story