சூதாட்டத்தில் கிடைத்த ரூ.15 லட்சத்தைடீ வியாபாரியிடம் கொள்ளையடித்த 8 பேர் கைது


சூதாட்டத்தில் கிடைத்த ரூ.15 லட்சத்தைடீ வியாபாரியிடம் கொள்ளையடித்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:46 PM GMT)

சூதாட்டத்தில் சம்பாதித்த பல லட்சம் ரூபாயை டீக்கடை வியாபாரியிடம் இருந்து கொள்ளையடித்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அனுமந்தநகர்:

பெங்களூரு ஸ்ரீநகரை சேர்ந்தவர் திலக், டீ வியாபாரி. சூதாட்டத்தில் அவர் ஆர்வம் கொண்டவர். கோவாவில் உள்ள கேசினோக்களில் நடைபெறும் சூதாட்டம் பற்றி அவர் அறிந்து கொண்டார். கடந்த ஜூலை மாதம் ரூ.4 லட்சத்துடன் பெங்களூருவில் இருந்து திலக் கோவா சென்றார். அங்கு 5 நாட்கள் தங்கி இருந்து ஒரு கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.25 லட்சத்தை சம்பாதித்தார்.

இதுபற்றி குடும்பத்தினர், நண்பர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். கடந்த 5-ந் தேதி கோவாவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய திலக்கை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். அதாவது திலக் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சத்தை வேறு ஒரு வங்கி கணக்குக்கு கொள்ளையர்கள் மாற்றி இருந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அனுமந்தநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கார்த்திக், ராகுல் உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர். சூதாட்டத்தில் கிடைத்த பணத்துடன் திலக் பெங்களூருவுக்கு வருவது பற்றி அறிந்து 8 பேரும், அவரை கடத்தி பணத்தை கொள்ளையடித்துவிட்டு மும்பையில் தலைமறைவாக இருந்தது தெரிந்தது. கைதான 8 பேரிடம் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story