ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கு; சமீர் வான்கடேயை கைது செய்ய தடை


ஷாருக்கானிடம்  ரூ.25 கோடி  லஞ்சம் கேட்ட வழக்கு; சமீர் வான்கடேயை கைது செய்ய தடை
x

ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் ஜூன் 8-ந் தேதி வரை சமீர்வான்கடேயை கைது செய்ய சி.பி.ஐ.க்கு மும்பை ஐகோர்ட்டு தடைவிதித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. நடுக்கடலில் கப்பலில் சோதனை நடத்திய மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவினர் போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். அதன்பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் சொகுசு கப்பலில் சோதனை நடத்திய ஆர்யன் கானை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்ததாக முன்னாள் மந்திரி நவாப் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார். இதேபோல போதை பொருள் வழக்கில் சாட்சியாக இருந்த பிரபாகர் சாயில், சமீன் வான்கடே தரப்பு ஷாருக்கானிடம் ரூ.25 கோடி பறிக்க திட்டம் போட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இந்தநிலையில் சமீபத்தில் சி.பி.ஐ. ஆர்யன்கானை வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில் சி.பி.ஐ. வழக்கிற்கு எதிராக சமீர்வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு சமீர் வான்கடேயை இன்று வரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து இருந்தது. அதே நேரத்தில் அவரை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து சமீர்வான்கடே கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 2 நாட்களும் தலா 5 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்தநிலையில் இன்று சமீர் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதிகள் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை சமீர் வான்கடேயை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.


Next Story