ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது உறுதி - முதல்-மந்திரி அசோக் கெலாட்


ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது உறுதி - முதல்-மந்திரி அசோக் கெலாட்
x

ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது உறுதி என்று முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த சில மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் இதற்கு முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது திவால் நிலைக்கு கொண்டு சென்று விடும் என அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆனால் அலுவாலியாவின் இந்த கருத்தை ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நிராகரித்து உள்ளார். மனிதாபிமான அடிப்படையில் தங்கள் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நம்மிடம் இருக்கும் நிதி நிர்வாகத்தை நாங்கள் நம்புகிறோம். இந்த திட்டம் குறித்து உட்கார்ந்து விவாதித்தோம். செய்ய முடியாத வேலை இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்' என தெரிவித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியே 60 ஆண்டுகளாக நாடு முன்னேறியது என்றால், இனியும் அது தொடரப்படும் என்றும் அவர் கூறினார். பணி ஓய்வுக்குப்பின் அரசு ஊழியர்கள் சமூக பாதுகாப்பு பெற உரிமை உண்டு என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அனைத்து பொருளாதார வல்லுனர்களும் தங்கள் அறிவுத்திறனைப் பயன்படுத்துகின்றனர் எனக்கூறிய அசோக் கெலாட், ஆனால் தனது அரசாங்கம் அதன் நிதி நிர்வாகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story