சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
x

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேசமயம், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என ஐகோர்ட் வழங்கிய உத்தரவு விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்கேவியட் மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story