சிக்கமகளூருவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில்ரூ.30 லட்சத்தை கையாடல் செய்த ஊழியர்


சிக்கமகளூருவில்  பெட்ரோல் விற்பனை நிலையத்தில்ரூ.30 லட்சத்தை கையாடல் செய்த ஊழியர்
x
தினத்தந்தி 21 Aug 2023 7:00 PM GMT (Updated: 21 Aug 2023 7:01 PM GMT)

சிக்கமகளூருவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.30 லட்சத்தை ஊழியர் கையாடல் செய்துள்ளார். அந்த பணத்தை சூதாட்டம், மோசடிகாரர்களிடம் அவர் இழந்தது தெரியவந்துள்ளது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.30 லட்சத்தை ஊழியர் கையாடல் செய்துள்ளார். அந்த பணத்தை சூதாட்டம், மோசடிகாரர்களிடம் அவர் இழந்தது தெரியவந்துள்ளது.

ரூ.30 லட்சம் கையாடல்

சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெட்ரோல் விற்பனை நிலைய வங்கி கணக்கில் இருந்து ரூ.30 லட்சம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், இதுபற்றி சரத்திடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர், இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் ஊழியர் சரத்தை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பெட்ரோல் விற்பனை நிலைய வங்கி கணக்கில் இருந்து ரூ.30 லட்சத்தை கையாடல் செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கார் வாங்க முயன்று...

பெட்ரோல் விற்பனை நிலையத்தின் வங்கி கணக்கு விவரங்களை சரத் பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், லாட்டரி மூலம் ரூ.25 லட்சம் மதிப்பிலான கார் ஒன்று பரிசாக விழுந்துள்ளது. அதற்கு நீங்கள் ரூ.11 லட்சம் செலுத்தினால், உங்களது வீட்டுக்கே கார் அனுப்பி வைக்கப்படும் என்று கூறி உள்ளார். இதனை நம்பிய சரத், அந்த காரை வாங்க முடிவு செய்தார்.

மேலும் பெட்ரோல் விற்பனை நிலைய வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சத்தை எடுத்து அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக செலுத்தினார். ஆனால் அவருக்கு கார் எதுவும் வரவில்லை. மேலும் அந்த நபரையும் சரத்தால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை சரத் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பெட்ரோல் விற்பனை நிலைய வங்கி கணக்கில் இருந்து எடுத்த ரூ.11 லட்சத்துக்கு என்ன செய்வது யோசித்தார்.

சூதாட்டத்தில் ரூ.19 லட்சத்தை இழந்தார்

அப்போது கோவாவுக்கு சென்று கேசினோ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை சம்பாதித்து யாருக்கும் தெரியாமல் பெட்ரோல் விற்பனை நிலைய வங்கி கணக்கிற்கு செலுத்திவிடலாம் என முடிவு செய்தார். கோவா சென்று கேசினோ சூதாட்டத்தில் ஈடுபடவும் பெட்ரோல் விற்பனை நிலைய வங்கி கணக்கில் இருந்து ரூ.19 லட்சத்தை சரத் எடுத்தார். அந்த பணத்துடன் கோவா சென்ற அவர், கேசினா சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அதிலும் சரத் பணத்தை இழந்துள்ளார்.

அதன்பின்னர் ஏமாற்றத்துடன் அவர் சிக்கமகளூருவுக்கு திரும்பி வந்துள்ளார். அதன்பிறகு தான் பெட்ரோல் விற்பனை நிலைய வங்கி கணக்கில் இருந்து ரூ.30 லட்சம் மாயமாகி இருந்ததும், அதனை சரத் கையாடல் செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக சிக்கமகளூரு டவுன் போலீசார் சரத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story