கனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள்.. ஜஸ்டின் ட்ரூடோவிடம் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி


கனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள்.. ஜஸ்டின் ட்ரூடோவிடம் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி
x

திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கும்பல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றுடன் தீவிரவாத சக்திகளின் நடவடிக்கை கனடாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். குறிப்பாக இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இதற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் இடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது கனடாவில் தீவிரவாத சக்திகளின் இந்திய விரோத நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

"தீவிரவாத சக்திகள் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து, இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகின்றனர். தூதரகங்களை சேதப்படுத்துகின்றனர். கனடாவில் உள்ள இந்திய சமூகத்திற்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர். திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கும்பல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றுடன் இந்த தீவிரவாத சக்திகளின் நடவடிக்கை கனடாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கையாள்வதில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது அவசியம்" என பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே காலிஸ்தான் தீவிரவாதம் மற்றும் வெளிநாட்டு தலையீடு குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கனடா எப்போதும் கருத்து சுதந்திரம் அளிப்பதாகவும், அமைதியான வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்த சுதந்திரம் அளிப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம், வன்முறையை தொடர்ந்து தடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.


Next Story