சுள்ளியாவில் மைனர்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


சுள்ளியாவில் மைனர்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:45 PM GMT)

சுள்ளியாவில் மைனர்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மங்களூரு-

சுள்ளியாவில் மைனர்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மைனர்பெண் பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே கல்மனடுக்கா கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மைனர்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக், அந்த மைனர்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் கார்த்திக் மைனர்பெண்ணை மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன மைனர்பெண், இதுபற்றி யாரிடமும் கூறவில்லை.

கர்ப்பம்

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி மைனர்பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மைனர்பெண்ணை அவரது பெற்றோர், சுள்ளியா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது மைனர்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, மைனர்பெண் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு மைனர்பெண்ணின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தான், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறி மைனர்பெண் கதறி அழுதுள்ளார்.

வாலிபர் கைது

இதையடுத்து மைனர்பெண்ணின் பெற்றோர் பெல்லாரே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைனர்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கார்த்திகை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story