கன்னடம் பேச தெரியாததால் பஞ்சாப் பெண் மீது சரமாரி தாக்குதல்


கன்னடம் பேச தெரியாததால் பஞ்சாப் பெண் மீது சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:45 PM GMT)

கன்னடம் பேச தெரியாததால் பஞ்சாப் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

வித்யாரண்யபுரா:

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் நீலன்ஜித் கவுர்(வயது 46). இவர் பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபொம்மசந்திரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு நீலன்ஜித் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே ஒரு குழந்தை வந்தது. இதனால் ஸ்கூட்டரை பிரேக் பிடித்து நீலன்ஜித் நிறுத்தினார்.

அப்போது அங்கு வந்த குழந்தையின் பெற்றோரிடம், குழந்தையை சாலையில் இப்படி கவனக்குறைவாக விட வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த சில பெண்கள் நீலன்ஜித்திடம் கன்னடத்தில் பேசி வாக்குவாதம் செய்து உள்ளனர். ஆனால் நீலன்ஜித்துக்கு கன்னடத்தில் பேச தெரியவில்லை. இதனை காரணமாக வைத்து நீலன்ஜித்தை பிடித்து பெண்கள் தாக்கி உள்ளனர். மேலும் கன்னடம் பேச தெரியாவிட்டால் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீலன்ஜித் அளித்த புகாரின்பேரில் வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story