இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது


இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
x

இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு சம்பங்கிராம் நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எச்.ரோட்டில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் சம்பங்கிராம் நகர் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. அதே நேரத்தில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பங்கிராம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். மர்மநபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் முபாரக் (வயது 38) என்று தெரிந்தது. இவர், இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி சிட்டி மார்க்கெட்டில் ஒரு இளம்பெண் ஆட்டோவுக்காக காத்திருந்தார். அவரை தனது ஆட்டோவில் ஏற்றி முபாரக் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் சம்பங்கிராம் நகர் கே.எச்.ரோட்டில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு இளம்பெண்ணை கடத்தி சென்று, முதல் மாடியில் வைத்து முபாரக் கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாடியில் இருந்து கீழே தள்ளி இளம்பெண்ணை கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான முபாரக் மீது சம்பங்கிராம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story