வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக உதவி எண்கள் - மேற்கு வங்க அரசு அறிவிப்பு


வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக உதவி எண்கள் - மேற்கு வங்க அரசு அறிவிப்பு
x

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக உதவி எண்களை மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.

கொல்கத்தா,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.

பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டு கொண்டார். சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளன. நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகாலாந்து, அசாம் மற்றும் மேகாலயா ஆகிய அண்டை மாநிலங்கள் மணிப்பூரில் வன்முறைக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக அவசர உதவி மையத்தைத் திறந்துள்ளன. இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டு மணிப்பூரில் சிக்கித் தவிப்பவர்களுக்காக மேற்கு வங்காள அரசு உதவி எண்ணை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "மணிப்பூரிலிருந்து எங்களுக்கு வரும் செய்திகளால் மிகுந்த வேதனையடைகிறோம். இப்போது அங்கு சிக்கித் தவிக்கும் மணிப்பூர் மக்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். வங்காள அரசு மக்களுக்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளது. மேலும் மணிப்பூர் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

துயரத்திலும் விரக்தியிலும் உள்ள மக்களுக்கு உதவ, முழு செயல்முறையையும் கண்காணிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் எல்லா நேரங்களிலும் மக்களுடன் இருக்கிறோம். அனைவரையும் அமைதி காக்க வலியுறுத்துங்கள். உதவி தேடுபவர்கள் இந்த எண்களில் எங்களை தொடர்பு கொள்ளலாம். உதவி எண்கள்: 033-22143526, 033-22535185" என்று கூறியுள்ளார்.


Next Story