போபால்: ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்கார முயற்சி - இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்


போபால்: ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்கார முயற்சி - இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
x

ரெயில் பெட்டியில் இருந்த யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போபால்,

கடந்த 19-ந்தேதி பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் வரை செல்லும் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில், பெண் பயணி ஒருவருக்கு 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரையும், அவருடன் வந்த அவரது ஆண் நண்பரையும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.

அந்த பெண்ணும், அவரது ஆண் நண்பரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். சம்பவம் நடந்த நாளன்று இருவரும் சூரத் செல்வதற்கான இணைப்பு ரெயிலை தவறவிட்டதால் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இரவு 10 மணியளவில் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுபெட்டியில் ஏறியுள்ளனர். அந்த ரெயில் பெட்டியில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் குவாலியரை தாண்டி ரெயில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணின் ஆடைகளை பிடித்து கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அந்த பெண்ணின் ஆண் நண்பர் அவர்களை தடுத்துதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.

ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இளம்பெண்ணால் எழுந்து நடக்க முடியவில்லை. இதையடுத்து அவரது நண்பர் தனது கிழிந்த ஆடைகளால் பெண்ணின் உடலை மூடி, மருத்துவ உதவி பெறுவதற்காக கொட்டும் மழையில் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு நடந்து சென்றுள்ளார்.

அருகில் இருந்து 2 கிராமங்களில் அவர்கள் உதவி கேட்ட போது, அவர்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இதையடுத்து 3-வதாக ஒரு கிராமத்துக்கு சென்று உதவி கேட்டுள்ளனர். அங்கு ஒரு வயதான தம்பதிகள் இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து காயங்களுக்கு மருந்து கொடுத்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணுக்கு மாற்றுத் துணிகளையும் கொடுத்து, மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்துள்ளனர்.

இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், ரெயில் பெட்டியில் தன்னிடம் 3 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போது, அங்கிருந்த யாரும் அவர்களை தடுக்க முன்வரவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.


Next Story