பீகார்: திருமண விருந்தில் பங்கேற்று விட்டு காரில் திரும்பியபோது விபத்து; 6 பேர் பலி


பீகார்:  திருமண விருந்தில் பங்கேற்று விட்டு காரில் திரும்பியபோது விபத்து; 6 பேர் பலி
x

பீகாரில், சரக்கு லாரி ஒன்று திடீரென டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி காரின் மீது கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பாகல்பூர்,

பீகாரில் பாகல்பூரில் ஆமபூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 80-ல் நேற்றிரவு சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில், திருமண விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, மங்கர் நகரின் தபரி பகுதியில் இருந்து காஹல்காவன் நகரில் உள்ள ஸ்ரீமத்பூர் நோக்கி சிலர் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், கோகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்றபோது, இரும்பு தடிகளை ஏற்றி கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் டயர் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அந்த வேகத்தில் இவர்கள் பயணித்த காரின் மீது கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் இருந்தவர்கள் சிக்கி கொண்டு அலறினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அந்த பகுதியில் வசிக்க கூடியவர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணி நடந்தது. இதில், குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story