பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ராஜினாமா


பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ராஜினாமா
x
தினத்தந்தி 28 Jan 2024 6:13 AM GMT (Updated: 28 Jan 2024 7:26 AM GMT)

பீகார் மாநில கவர்னரை சந்தித்து நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பாட்னா,

பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.

பின்னர் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்துவதாக கூறி, லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்த நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனிடையே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை அமைப்பதிலும் நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார்.

இந்த சூழலில், பீகாரில் கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடன் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதேசமயம் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் வலியுறுத்தியும் கூட்டணி கட்சிகள் அதனைக் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பீகார் மாநில கவர்னரை இன்று சந்திக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது.

இந்நிலையில் நிதிஷ்குமார் இன்று கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாகவும், தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் இன்று மாலையே மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story