பீகார்: அரசின் தடை உத்தரவால் உள்துறை மந்திரி அமித்ஷா பயணம் ரத்து


பீகார்: அரசின் தடை உத்தரவால் உள்துறை மந்திரி அமித்ஷா பயணம் ரத்து
x

பீகாரில் அரசின் 144 தடை உத்தரவால் சசராம் பகுதிக்கான மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.



பாட்னா,


பீகாரில் பல்வேறு நகரங்களில் ராமநவமி கொண்டாட்டங்கள் நடந்தன. இதனையொட்டி சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்டவை நடந்தன. இதனை முன்னிட்டு, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், வன்முறை பரவியது. 8 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகர பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி பீகார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். நாலந்தாவில் 27 பேரும், ரோத்தாசில் 18 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என டுவிட்டரில் போலீசார் தெரிவித்து உள்ளனர். மூத்த அதிகாரிகளும் வன்முறை பரவிய பகுதிகளில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து, தூண்டிவிட கூடிய அல்லது பொய்யான செய்திகள் பரவி விடாமல் தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பேண ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் டுவிட்டர் வழியே கேட்டு கொண்டனர். இதன் எதிரொலியாக, ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகரில் பீகார் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதனால், சசராம் பகுதிக்கு செல்வதற்கு மத்திய மந்திரி அமித்ஷா திட்டமிட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனை பீகார் பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி இன்று உறுதி செய்து உள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மந்திரி அமித்ஷா சசராம் பகுதிக்கு வர இருந்த சூழலில், பீகார் அரசு 144 தடை உத்தரவு போட்டு உள்ளது. இதனால், நிகழ்ச்சியை நாங்கள் ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற சூழலில் எப்படி நாங்கள் நிகழ்ச்சி நடத்த முடியும்? என அவர் கேட்டு உள்ளார்.


Next Story