இளம்பெண் வரவேற்பாளர் கொலை; கைதான விடுதி உரிமையாளரின் தந்தை பாஜகவில் இருந்து நீக்கம்

இளம்பெண் வரவேற்பாளர் கொலை வழக்கில் பாஜக தலைவரின் மகனான சொகுசு விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா.
அம்மாநிலத்தின் பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. 'வனந்த்ரா' என்ற அந்த சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் கடந்த 18-ம் தேதி பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையின் போது இளம் பெண் வரவேற்பாளர் அங்கிதாவை விடுதி உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே கொலை செய்தது தெரியவந்தது. அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்துள்ளார்.
இந்த கொலைக்கு சொகுசு விடுதியில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்த புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் உடல் கால்வாயில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அங்கிதாவை விடுதி உரிமையாளர் புல்கிட் ஆர்யா கொலை செய்து கால்வாயில் வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வரவேற்பாளர் அங்கிதா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்து தள்ள மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாஜக தலைவரும், புல்கிட் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யாவுக்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், பாஜக எம்.எல்.ஏ,வின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது. புல்கிட் ஆர்யாவின் சகோதரனான அங்கித் ஆர்யாவையும் கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பாஜக அறிவித்துள்ளது.






