பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி; காங்கிரசில் சேர முடிவா..?


பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி; காங்கிரசில் சேர முடிவா..?
x

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து கடிதம் அளித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்த பெருமைக்கு உரியவர் ஜெகதீஷ் ஷெட்டார். வருகிற மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக கட்சிக்கு எதிராக சில விசயங்களை கூறி வந்துள்ளார்.

இதனால், கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் இன்று கூறும்போது, கட்சியை சில தலைவர்கள் தவறாக கையாளுகின்றனர் என்றொரு குற்றச்சாட்டை கூறினார்.

கட்சி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறேன் என கூறினார். இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை அவர் இன்று ராஜினாமா செய்து உள்ளார்.

அதற்கான பதவி விலகல் கடிதம் ஒன்றை சபாநாயகர் விஷ்வேஷ்வர் ஹெக்டே ககேரியை சிர்சி நகரில் வைத்து இன்று நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்து உள்ளார்.

இதன்பின் திரும்பிய அவரிடம் காங்கிரசில் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்கப்பட்டதற்கு, நான் இன்னும் முடிவு செய்யவில்லை என பதிலளித்து உள்ளார்.

கட்சியின் மூத்த தலைவரான ஷெட்டார் 6 முறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்-மந்திரி, சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தி உள்ளது என கூறப்படுகிறது.

இதனால், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என்றும் ஷெட்டார் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story