நாடாளுமன்ற அவையில் அத்துமீறி நுழைந்த நபரிடம் பா.ஜ.க. எம்.பி.யின் பெயரிலான அனுமதி பாஸ்


நாடாளுமன்ற அவையில் அத்துமீறி நுழைந்த நபரிடம் பா.ஜ.க. எம்.பி.யின் பெயரிலான அனுமதி பாஸ்
x

அவையில் அத்துமீறி நுழைந்த, மற்றொரு நபர் கர்நாடகாவின் மைசூரு நகரை சேர்ந்த என்ஜினீயர் என தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பூஜ்ய நேரம் நடந்து கொண்டிருந்தபோது, மதியம் 1 மணியளவில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் திடீரென உள்ளே குதித்தனர். அவர்கள் மஞ்சள் வண்ண புகையை வெளிப்படுத்தும் உலோக பொருளை வெடிக்க செய்தனர்.

சர்வாதிகாரிகளை அனுமதிக்க முடியாது என்று அந்த நபர்கள் கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட 2 பேர் வண்ண புகையை வெளிப்படுத்தும் கேன்களை பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிடிபட்டனர்.

இதனால், அவையில் இருந்த எம்.பி.க்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவை உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவான நிலையில், இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களில் ஒருவரிடம் இருந்த நுழைவுக்கான அனுமதி சீட்டில் சாகர் சர்மா என அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவருக்கு பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா பெயரில் அந்த அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

இதில், மற்றொரு நபர் கர்நாடகாவின் மைசூரு நகரை சேர்ந்த டி. மனோரஞ்சன் என தெரிய வந்துள்ளது. அவர் ஒரு என்ஜினீயர் என்றும் தெரிய வந்துள்ளது.


Next Story