'மணிப்பூர், நாகாலாந்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் பா.ஜ.க. கலக்கத்தில் உள்ளது' - சித்தராமையா


மணிப்பூர், நாகாலாந்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் பா.ஜ.க. கலக்கத்தில் உள்ளது - சித்தராமையா
x
தினத்தந்தி 19 Jan 2024 9:36 PM GMT (Updated: 20 Jan 2024 1:29 AM GMT)

அசாமில் நடைபெறும் ஊழல் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதியாகியுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ந்தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இருந்து யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, அடுத்ததாக நாகாலாந்து சென்றார். தொடர்ந்து அசாம் மாநிலத்தில் தற்போது ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், 'மணிப்பூர், நாகாலாந்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் பா.ஜ.க. கலக்கத்தில் உள்ளது' என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா விமர்சித்துள்ளார். இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் கிடைத்த அமோக வரவேற்பு பா.ஜ.க.வை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே போன்ற வரவேற்பு அசாம் மாநிலத்திலும் கிடைக்கும் என்பதை அறிந்து, அம்மாநில அரசு ஜனநாயகத்திற்கு எதிரான வகையில் செயல்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா, பல்வேறு கட்டுபாடுகளை விதித்ததோடு, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவரது இந்த அச்சத்தின் மூலம் அசாமில் நடைபெறும் ஊழல் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் ராகுல் காந்தி தனது நிலைகுலையாத அர்ப்பணிப்புடன், நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியை தொடர்ந்து வருகிறார்."

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story