டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது- அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்


டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது- அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்
x

Image Courtesy: PTI  

ஆம் ஆத்மி அரசின் மின் மானியத் திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா நேற்று உத்தரவிட்டார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மின் கட்டணத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக 200 யூனிட்-க்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்கள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. இதேபோல் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்களுக்குடெல்லி அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி அரசின் மின் மானியத் திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர், பிஎஸ்இஎஸ் டிஸ்காம்களுக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கிய மின் மானியத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து விசாரிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநரின் இந்த உத்தரவையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது. டெல்லி மக்களே எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். குஜராத் மக்களுக்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் அமைந்தால், அடுத்த ஆண்டு மார்ச் 1 முதல் உங்களுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.


Next Story