பெங்களூருவில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி


பெங்களூருவில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி
x

பெங்களூருவில் இண்டிகோ விமானத்திற்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.


பெங்களூரு,



கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் 175 பயணிகள் இருந்துள்ளனர்.

விமானத்தின் கழிவறையில் மிரட்டல் குறிப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை விமான சிப்பந்தி ஒருவர் கவனித்து உள்ளார். இதுபற்றி விமான கேப்டனிடம் தெரிவித்து உள்ளார். அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து, முறையாக அனுமதி பெற்று விமான நிலையத்தில் தரையிறக்கி உள்ளார்.

இதன்பின்னர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

விமான பயணிகளின் வசதிக்காக மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சந்தேகப்படும்படியான பயணிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இண்டிகோ விமானம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. கடந்த ஜூலை 28ந்தேதி இதேபோன்று ஒரு சம்பவத்தில் அசாம் விமான நிலையத்தில், கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது.

இதன்பின் விமானம் நிறுத்தப்பட்டு 6 மணிநேரம் வரை அதனை சரிசெய்ய முயன்று, தொழில் நுட்ப கோளாறை சீர் செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூலை 21-ந்தேதி இண்டிகோ விமான பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். உடனடியாக விமானம் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

அதற்கு முன், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்த இண்டிகோ விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறால், பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு திருப்பி விடப்பட்டது.

இதேபோன்று, கடந்த 2-ந்தேதி டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன் கார் ஒன்று செயல்படாமல் நின்றதில் விமானம் புறப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது. பயணிகளும் அதிக சிரமம் அடைந்தனர்.


Next Story