சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி


சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி
x

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் சிங் தெரிவித்தார்.

பலராம்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த சிறுவன் ரித்தேஷ் (வயது 5). சிறுவன் தனது தாத்தாவுடன் காட்டிற்குள் சென்றபோது , புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ரித்தேஷை கவ்வி இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது.

பின்னர் சிறுவனை தேடத் தொடங்கினர். அப்போது சிறிது தூரத்தில் சிறுவனின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

'சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்படும். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும்' என மாவட்ட கலெக்டர் அரவிந்த் சிங் தெரிவித்தார்.


Next Story