மாநிலங்களவை தேர்தல்: விலைபோகாமல் தடுக்க சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படும் எம்.எல்.ஏக்கள்

மாநிலங்களவை தேர்தலுக்குள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலைபோய்விடாமல் தடுப்பதற்காக, அரியானா காங்கிரஸ் போராடி வருகிறது.
சண்டிகார்,
நாடு முழுதும், 15 மாநிலங்களில், 57 மாநிலங்களவை எம்.பி., பதவிகளுக்கு, 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ள அரியானாவில், இரண்டு எம்.பி., பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது.
காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் அஜய் மக்கான், பாஜக சார்பில் கிஷண் லால் பன்வார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் வினோத் சர்மாவின் மகன் கார்த்திகேய சர்மா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள ஜனநாயக் ஜனதா கட்சித் தலைவர் அஜய் சிங் சவுதாலா, தன் கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களும் காத்திகேய சர்மாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அறிவித்தார். மேலும் சிலருடைய ஆதரவும் அவருக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் விலைபோவதை தடுப்பதற்காக, அவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.






