நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல் - உள்துறை மந்திரி அமித்ஷா திட்டவட்டம்


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல் - உள்துறை மந்திரி அமித்ஷா திட்டவட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2024 10:00 AM GMT (Updated: 10 Feb 2024 10:05 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக இருந்து மதரீதியில் பிரச்சினைகளை சந்தித்து இந்தியாவில் அகதிகளாக வாழும் இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சீ, கிறிஸ்தவம் ஆகிய மதத்தினரை சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்கும். ஆனால், 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய உலகளாவிய தொழில் மாநாட்டில் உள்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது,

நாடாளுமன்ற முடிவு என்ன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரவேண்டும் என்பதை காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளும் தெரிந்துகொண்டன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370ஐ நாங்கள் நீக்கினோம். ஆகையால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பா.ஜ.க.வுக்கு 370 தொகுதிகளில் வெற்றியை கொடுப்பார்கள், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என நம்புகிறேன்.

கடவுள் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டுமென 500 முதல் 550 ஆண்டுகளாக மக்கள் நம்புகின்றனர். ஆனால், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும் ராமர் கோவில் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச்சட்டம் 2019ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. விதிகள் வெளியிடப்பட்டப்பின் குடியுரிமை திருத்தச்சட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டப்பட்டுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் மதரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல.

பொதுசிவில் சட்டம் இந்தியாவின் முதல் பிரதமரால் கையெழுத்திடப்பட்ட இந்திய அரசியலமைப்பு நிரலில் உள்ளது. ஆனால், அரசியல் சமரசத்திற்காக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தாமல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது. உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது சமூக மாற்றத்திற்கானது. பொதுசிவில் சட்டம் குறித்து அனைத்து நிலைகளிலும் ஆலோசிக்கப்பட்டு சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையிலான சிவில் சட்டங்களை கொண்டிருக்கக்கூடாது' என்றார்.


Next Story