நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் - மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்


நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் - மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
x
தினத்தந்தி 16 Aug 2023 11:14 AM GMT (Updated: 16 Aug 2023 11:18 AM GMT)

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரிகள் அனுராக் தாகூர் மற்றும் அஸ்வின் வைஷ்ணவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறுகையில், 'பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 57 ஆயிரத்து 613 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அமல்படுத்தப்படும்' என்றார்.

அதேபோல், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'கைவினை பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின் விஸ்வர்மா திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு 5 சதவிகித வட்டியில் 1 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்க மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மந்திரி சபை 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது' என்றார்.


Next Story