எங்களை நேருக்கு நேராக பார்க்க முடியுமா? ஷிண்டே தரப்புக்கு ஆதித்ய தாக்கரே கேள்வி


எங்களை நேருக்கு நேராக பார்க்க முடியுமா? ஷிண்டே தரப்புக்கு ஆதித்ய தாக்கரே கேள்வி
x

எங்களை நேருக்கு நேராக அவர்கள் பார்க்க முடியுமா? என ஷிண்டே தலைமையிலான அணியை நோக்கி ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.



புனே,



மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க. கைகோர்த்தது.

இந்த சூழலில், மராட்டிய சபாநாயகர் கடந்த வியாழ கிழமை (ஜூன் 30ந்தேதி) அவையை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறி கடந்த 29ந்தேதி இரவு உத்தவ் தாக்கரே பதவி விலகினார். அவர் பதவி விலகிய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என கவர்னர் கூறினார்.

இதன்பின்னர், அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி என்றும் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியானது. இதன்படி, ஷிண்டே முதல்-மந்திரியானார்.

மராட்டியத்தில் புதிய அரசு வருகிற திங்கட் கிழமையன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

சிவசேனாவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக ஷிண்டே நீக்கப்பட்டார். பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகரை சபாநாயகர் ஆக்கும் பணிகளில் அக்கட்சி மும்முரமுடன் ஈடுபட்டது. இதன்படி, இன்று நடந்த மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்வியை விட 50 வாக்குகள் கூடுதலாக, பா.ஜ.க. உறுப்பினர் ராகுல் நர்வேகர் பெற்றார். 164 வாக்குகளை பெற்ற அவர் வெற்றி பெற்றார்.

இதனால், மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதற்கு பின்னர் சிவசேனா தலைவர்களில் ஒருவரான ஆதித்ய தாக்கரே செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று வந்த அந்த எம்.எல்.ஏ.க்கள் (ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி), எங்களை நேருக்கு நேராக பார்க்க முடியுமா? எவ்வளவு நாட்களுக்கு ஓட்டல் ஒன்றில் இருந்து மற்றொரு ஓட்டலுக்கு என சென்று கொண்டிருப்பீர்கள்? ஒரு நாள் எப்படியும் இந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை தொகுதிக்கு சென்றாக வேண்டும்.

அப்போது அவர்கள் மக்களை எப்படி சந்திப்பார்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு முன்பு, மராட்டிய சட்டசபை சபாநாயகர் தேர்தலுக்காக அருகேயிருந்த ஆடம்பர ஓட்டலில் தங்கியிருந்த ஷிண்டே தலைமையிலான அணி புறப்பட்டு, சட்டசபை வளாகத்திற்குள் நுழையும்போது, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் சட்டசபைக்குள் வந்தனர். இதனை சுட்டி காட்டி பேசிய தாக்கரே, இதற்கு முன்பு மும்பையில் இதுபோன்ற பாதுகாப்பினை நாங்கள் பார்த்தது இல்லை. ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்? யாரும் ஓடி விட போகிறார்களா? ஏன் இவ்வளவு பயம்? என்றும் கேள்வி எழுப்பினார்.


Next Story