கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு


கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:45 PM GMT)

கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு:

எப்.ஐ.சி.சி.ஐ. புற்றுநோய் செயல்படையின் பெங்களூரு பிரகடனத்தை கர்நாடக சட்டசபை சபாநாயகர் யு.டி.காதர் வெளியிட்டார். இது தென்மண்டலத்திற்கான அறிக்கை ஆகும். மத்திய அரசின் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ஸ்வஸ்திசரண் உள்பட பலர் கலந்து கொண்டனர். கர்நாடகத்தில் 50 வயதுக்கு உட்பட்டவர்களிடையே புற்றுநோய் பாதிப்பு 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் நோக்கத்தில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். புகையிலை பழக்கம், அதிக எடை, சுகாதாரமற்ற உணவு பழக்க வழக்கம், மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமை போன்வற்றால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் குறித்த சமூக பார்வையை போக்க பெரிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் அந்த நோய் குறித்த தவறான பார்வையை போக்க வேண்டும்.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். புற்றுநோய் அறிகுறிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். புற்றுநோய் இருக்கும் சிகிச்சை வசதிகள் குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். வலி நிவாரண சிகிச்சை, மன அழுத்த நிர்வாக சேவை அனைத்து புற்றுநோய் மருத்துவ மையங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயங்களை செய்வதின் மூலம் 2028-ம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்பை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story