சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு


சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு
x

ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கேரள ஐகோர்ட்டு கூறியது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அரவணை பாயாசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசி, சர்க்கரை, பழம், நெய் ஆகியவை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதுதவிர ஏலக்காய், சீரகம் போன்ற பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தநிலையில் கடந்த ஜனவரி 12-ந் தேதி ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கூறிய கேரள ஐகோர்ட்டு, அதற்கு காரணமாக அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவை சுட்டிக்காட்டி எச்சரித்தது. அத்துடன் அதனை பயன்படுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவை உண்ணத்தக்கவை என்று மேல் முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்தநிலையில் தற்போது தினமும் 200 பேட்ச்சுகள் அரவணை பாயாசம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:- இனிமேல் அரவணை பாயாசத்தில் ஏலக்காய் சேர்க்கப்படாது. கடந்த ஓராண்டாக அவ்வாறு ஏலக்காய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட அரவணை பாயாசம் குறித்து எந்த புகார்களும் வராத நிலையில், தற்போது அரவணை பாயாசத்தில் ஏலக்காய் சேர்ப்பது தவிர்க்கப்பட்டு உள்ளது.

அத்துடன் சீரகத்திலும் கிருமிநாசினி உள்ளதாக சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர், தேவைப்பட்டால் சீரகமும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story