நடிகர் சோமசேகருக்கு கொலை மிரட்டல்: நடிகை நயனா மீது போலீசில் புகார்


நடிகர் சோமசேகருக்கு கொலை மிரட்டல்: நடிகை நயனா மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:46 PM GMT)

நடிகர் சோமசேகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் நடிகை நயனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு:

கன்னட தனியார் தொலைக்காட்சியில் காமெடி கில்லாடிகலு என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி இருந்தது. இந்த ரியாலிட்டி ஷோவில் கன்னட நடிகை நயனாவும், அவர் குழுவில் 4 பேரும் பங்கேற்று இருந்தனர். ரியாலிட்டி ஷோவில் பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்த சோமசேகர் என்பவரும் நடித்து இருந்தார். இந்த நிலையில் அந்த ரியாலிட்டி ஷோவில் நயனாவின் குழு வெற்றி பெற்று இருந்தது.

இதனால் அந்த குழுவுக்கு ரூ.3 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் பரிசு தொகையாக கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் சோமசேகருக்கும், நயனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது நயனா, சோமசேகரையும், அவரது குடும்பத்தினரையும் பற்றி அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து நயனா மீது ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் சோமசேகர் புகார் அளித்தார். மேலும் நயனாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் சோமசேகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சோமசேகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை நடிகை நயனா மறுத்துள்ளார். நடிகை மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் கன்னட திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story