இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: பெங்களூரு குடிநீர் பிரச்சினையை எழுப்ப கர்நாடக அரசு திட்டம்..?


இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: பெங்களூரு குடிநீர் பிரச்சினையை எழுப்ப கர்நாடக அரசு திட்டம்..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 April 2024 11:52 PM GMT (Updated: 4 April 2024 6:54 AM GMT)

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தை கர்நாடக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அங்கு நிலவும், குறிப்பாக பெங்களூருவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க இது ஒன்றே வழி என அரசு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் கருதுகின்றன. இதனால் அணை கட்டுமான பணிகளுக்கு அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கடந்த கூட்டத்தில் (மார்ச் 21 -ந் தேதி) பெங்களூரு நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க அந்த மாநில அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் தமிழக அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி. வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநிலங்களுக்கும் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பில் ஆணைய செயல்பாட்டுக்கான நிதியும் 4 மாநிலங்களிடமும் கோரப்பட்டு உள்ளது.

இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை அவசியம் என கர்நாடகம் வலியுறுத்தும் எனவும், தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறந்து விட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக தமிழ்நாடு நிற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story