டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: பி.ஆர்.எஸ். கவிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன்


டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: பி.ஆர்.எஸ். கவிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
x
தினத்தந்தி 21 Feb 2024 5:05 PM GMT (Updated: 21 Feb 2024 5:05 PM GMT)

டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் ஊழல் நடைபெற்றதாகக குற்றம்சாட்டப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி கலால் கொள்கை 2021-22 ஊழல் விசாரணை தொடர்பாக பிப்ரவரி 26ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர் கவிதாவுக்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக டிசம்பர் 2022-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

பி.ஆா்.எஸ். எம்.எல்.சி. கவிதா, ஒங்கோல் தொகுதி ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் எம்.பி. மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் அடங்கிய ஒரு குழு தங்களுடன் தொடா்புடைய தனியாா் மது ஆலைகளில் இருந்து டெல்லி அரசு மது கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி தலைவா்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை ஆம் ஆத்மி சாா்பில் அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் பெற்றுக் கொண்டாா் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கவிதாவுக்கு சி.பி.ஐ. அனுப்பிய புதிய சம்மன் குறித்து அவரது வழக்கறிஞர் நிதேஷ் ராணா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.


Next Story