சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு!


சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு!
x

சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கடந்த சில நாட்களுக்கு முன் பண்ணை இல்லத்தில் உள்ள குளியலறையில் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், இடதுபக்க இடுப்பு எலும்பு முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சந்திரசேகர ராவ் நலமாக இருப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகர ராவை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது சந்திரசேகர ராவ்வின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.


Next Story