சத்தீஷ்கார்: வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8.5 கோடி கொள்ளை - 7 பேர் கும்பல் கைவரிசை


சத்தீஷ்கார்: வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8.5 கோடி கொள்ளை - 7 பேர் கும்பல் கைவரிசை
x

சுமார் ரூ.7 கோடி பணம், ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள், தங்க கட்டிகள் கொள்ளைபோனதாக போலீசார் தெரிவித்தனர்.

ராய்கார்,

சத்தீஷ்கார் மாநிலம் ராய்கார் நகரத்தின் ஜகத்பூர் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 9.30 மணிக்கு இந்த வங்கிக்கு ஆயுதங்களுடன் 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ஒரு அறையில் அடைத்தனர்.

வங்கி மேலாளரை கூர்மையான ஆயுதத்தால் அவரது காலில் தாக்கி, பாதுகாப்பு பெட்டக சாவிகளை பிடுங்கினர். பின்னர் அதில் இருந்த பணம், நகைகள், தங்க கட்டிகளை அள்ளிக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றனர்.

அதன்பிறகு போலீசுக்கு தகவல் தெரிவித்த வங்கி மேலாளர், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் ரூ.7 கோடி பணம், ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள், தங்க கட்டிகள் கொள்ளைபோனதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அண்டை மாநிலங்களான ஒடிசா, ஜார்கண்ட் மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story