ரெயில்வே தண்டவாளம் அருகே கிடந்த வெடிகுண்டை கையில் எடுத்து விளையாடிய சிறுவன் குண்டு வெடித்ததில் உயிரிழப்பு!


ரெயில்வே தண்டவாளம் அருகே கிடந்த வெடிகுண்டை கையில் எடுத்து விளையாடிய சிறுவன் குண்டு வெடித்ததில் உயிரிழப்பு!
x
தினத்தந்தி 25 Oct 2022 11:36 AM GMT (Updated: 25 Oct 2022 11:38 AM GMT)

மேற்கு வங்க மாநிலம் பட்பராவில் ரெயில் தண்டவாளம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் பட்பராவில் ரெயில் தண்டவாளம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு குழந்தை இறந்தது. ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

காயமடைந்த பெண் மற்றும் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு வெடிக்காத நிலையில் கிடந்த இன்னொரு குண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

கொல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில், இன்று காலை 8.30 மணியளவில் காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே, ரெயில்வே தண்டவாளம் அருகே குண்டு வெடித்தது.

அந்த இடத்தில் வீசப்பட்டு அனாதையாக கிடந்த ஒரு பொட்டலத்தை கையிலெடுத்த அந்த சிறுவன், தனது நண்பர்கள் இருவருடன் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த பொட்டலத்தில் இருந்த குண்டு வெடித்தது.

சில சமூக விரோதிகள், ரெயில்வே தண்டவாளத்தை தகர்க்க அங்கு குண்டு வைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த சிறுவன் அதை வெடிகுண்டு என அறியாமல் எடுத்துக்கொண்டு வந்ததால் பரிதாபமாக உயிரிழந்தான்.

அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story