அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூன்; இந்தியாவையும் உளவு பார்த்ததாக தகவல்


அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூன்; இந்தியாவையும் உளவு பார்த்ததாக தகவல்
x

சீன பலூன் அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளை உளவு பார்த்ததாக அமெரிக்க ஊடகங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மேல் சீன உளவு பலூன் ஒன்று பறந்த நிலையில், அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அட்லாண்டிக் கடலில் வீழ்ந்த பலூனின் பாகங்களை அமெரிக்க கடற்படை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.

இதனிடையே அது உளவு பலூன் அல்ல என்றும், வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட பலூன் வழிமாறி சென்றுள்ளதாகவும் சீனா விளக்கமளித்தது. மேலும் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அந்த பலூன் சீன விமானப்படையால் இயக்கப்பட்டது என்றும், அது உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த நிலையில் சீன பலூன் அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா, ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் உளவு பார்த்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் கடந்த ஜனவரி மாதம் வங்கக் கடலில் இந்தியாவின் முக்கிய ராணுவ தளவாடங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்களின் மீது வெள்ளை நிற பலூன் பறந்ததாகவும், இது அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனாக இருக்கலாம் எனவும் அந்தமானில் உள்ள உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story