சிட்லகட்டாவில் இரு கோவில்களில் புகுந்து உண்டியல் பணம், நகைகள் திருட்டு


சிட்லகட்டாவில் இரு கோவில்களில் புகுந்து உண்டியல் பணம், நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:47 PM GMT)

சிட்லகட்டாவில் இரு கோவில்களில் புகுந்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிட்லகட்டா

ஆஞ்சநேயர் ேகாவிலில் திருட்டு

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுனில் பிரசித்தி பெற்ற பழமையான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பூசாரி பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர்.

நேற்று காலை பூசாரி வழக்கம் போல கோவிலுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மாயமாகி இருந்தது. அத்துடன் பீரோவில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தது.

இதனால் நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

மற்றொரு கோவில்

இதேபோல், சிட்லகட்டா அருகே பூதாளா கிராமத்தில் உள்ள மல்லி மல்லேஸ்வரா கோவிலிலும் நேற்று முன்தினம் இரவு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், உண்டியல் பணம் மற்றும் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து தனித்தனியாக சிட்லகட்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் 2 கோவில்களுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 2 கோவில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து சிட்லகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story