திரவுபதி முர்மு தொடர்பான கருத்து விவகாரம் : "சோனியாவை இழுப்பது வெட்கக்கேடானது" - மல்லிகார்ஜூன் கார்கே


திரவுபதி முர்மு தொடர்பான கருத்து விவகாரம் : சோனியாவை இழுப்பது வெட்கக்கேடானது - மல்லிகார்ஜூன் கார்கே
x

திரவுபதி முர்மு தொடர்பான கருத்து விவகாரத்தில் சோனியாவை இழுப்பது வெட்கக்கேடானது என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். தான் ஒருபோதும் இந்திய ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும், ஊடகங்களிடம் பேசும்போது கவனக்குறைவாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆளும் பாஜக இந்த விஷயத்தை பெரிதாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே இவ்வாறு ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்துப் பேசியதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். இந்த நிலையில் திரவுபதி முர்மு தொடர்பான கருத்து விவகாரத்தில் சோனியா காந்தியை இழுப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், தனது கருத்துக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூறினார். விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவைகள் குறித்து பேசவிடாமல் தடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக மல்லிகார்ஜூன் கார்கே விமர்சித்தார்.


Next Story