சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்


சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்
x

கோப்புப்படம்

மத்திய அரசின் முடிவால், சித்தாந்தரீதியான அறிவை சைனிக் பள்ளிகளில் புகுத்தும் அபாயம் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராணுவ அமைச்சகத்தின் கீழ் முற்றிலும் மத்திய அரசு நிதியில் 'சைனிக்' பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "மத்திய அரசு அறிமுகப்படுத்திய பொது-தனியார் கூட்டு அடிப்படையில், சைனிக் பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது 62 சதவீத சைனிக் பள்ளிகள், பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு சொந்தமாகி விட்டன.

இந்திய ஜனநாயகம், ஆயுதப்படைகளை கட்சி அரசியலில் இருந்து விலக்கியே வைத்துள்ளது. இந்த மரபை மத்திய அரசு மீறியுள்ளது. மத்திய அரசின் முடிவால், சித்தாந்தரீதியான அறிவை சைனிக் பள்ளிகளில் புகுத்தும் அபாயம் உள்ளது. ஆகவே, சைனிக் பள்ளிகளை தனியார்மயமாக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். இதற்காக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story