3 ஆயிரத்துக்கு கீழே வந்தது கொரோனா பாதிப்பு


3 ஆயிரத்துக்கு கீழே வந்தது கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம்

இந்தியாவில் 2 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கு கீழே வந்தது.

புதுடெல்லி,

நம் நாட்டில் கடந்த 2 நாட்களாக தினமும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. நேற்று தொற்று சற்றே குறைந்தது. 24 மணி நேரத்தில் 2,994 பேருக்கு கொரோனா உறுதியானது. நாட்டிலேயே அதிகளவில் கேரளாவில் 765 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டியம், கர்நாடகம், டெல்லி, தமிழ்நாடு, உ.பி., குஜராத். அரியானா, இமாசலபிரதேசம், கோவா ஆகிய 9 மாநிலங்களிலும் 100-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரையில் இந்தத் தொற்றினால் 4 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று தொற்றில் இருந்து 1,840 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரத்து 551 பேர் பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனாவால் நேற்று முன்தினம் 5 பேர் பலியாகி இருந்தனர். நேற்று டெல்லி, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் தலா 2 பேரும், குஜராத்தில் ஒருவரும் தொற்றால் இறந்த நிலையில், கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 2-ஐ கணக்கில் சேர்த்தனர். ஆக மொத்தம் நேற்றைய இறப்பு கணக்கு 9 ஆக உள்ளது. இதுவரை தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 876 ஆக உள்ளது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 1,146 கூடியது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 354 ஆக உள்ளது.


Next Story